ஆப்3ரஹ்மபு4வனால்லோகா1: பு1னராவர்தி1னோர்ஜுன |
மாமுபே1த்1ய து1 கௌ1ன்தே1ய பு1னர்ஜன்ம ந வித்3யதே1 ||16||
ஆ—ப்ரஹ்ம—புவனாத்---—ப்ரஹ்மாவின் இருப்பிடம் வரை; லோகாஹா--—உலகங்கள்; புனஹ ஆவர்தினஹ--—மறுபிறப்புக்கு உட்பட்டது; அர்ஜுனா--—அர்ஜுனன்; மாம்--—என்னை; உபேத்ய--—அடைந்த பின்; து--—ஆனால்; கௌந்தேய--—குந்தியின் மகன் அர்ஜுனன்; புனஹ ஜன்ம--—மறுபிறப்பு; ந--—ஒருபொழுதும் இல்லை; வித்யதே--—இருக்கும்;
BG 8.16: ஓ அர்ஜுனா, இந்த பொருள் சிருஷ்டியின் அனைத்து உலகங்களிலும், ப்ரஹ்மாவின் உயர்ந்த இருப்பிடம் வரை, நீ மறுபிறப்புக்கு உட்பட்டு இருப்பாய். ஆனால், குந்தியின் மகனே, என்னுடைய இருப்பிடத்தை அடைந்தவுடன், மறுபிறப்பு இல்லை.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
வேத ஸாஸ்திரங்கள் பூமிக்குரிய தளத்தை விட தாழ்வான ஏழு தளங்களை விவரிக்கின்றன - தல், அதல், விதல், ஸுதல், தலாதல், ரஸாதல், பாதால். இவை நரக இருப்பிடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பூமியின் தளத்திலிருந்து தொடங்கி மேலே ஏழு தளங்கள் உள்ளன – பூ4ஹு, பு4வஹ, ஸ்வஹ, மஹஹ, ஜனஹ, தபஹ, ஸத்யஹ. மேலே உள்ளவை ஸ்வர்க3 அல்லது தேவலோக வசிப்பிடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மற்ற மத மரபுகளும் ஏழு தளங்களைக் குறிக்கின்றன. யூத மதத்தில், ஏழு தளங்கள் தலமுட்3 என்று பெயரிடப்பட்டுள்ளன, அரபோ3த்2 மிக உயர்ந்ததாக பெயரிடப்பட்டுள்ளது (ஸாம் 68.4 ஐயும் பார்க்கவும்). இஸ்லாமியத்திலும், ஏழு தளங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, ஸாத்வான் ஆஸ்மான் (ஏழாவது தளம்) உயர்ந்ததாகக் கணக்கிடப்படுகிறது.
இருத்தலின் வெவ்வேறு தளங்கள் பல்வேறு உலகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. நமது ப்ரபஞ்சத்தில் பதினான்கு உலகங்கள் உள்ளன. அவற்றில் மிக உயர்ந்தது ப்3ரஹ்ம லோகம் எனப்படும் ப்ரஹ்மாவின் இருப்பிடம். இந்த லோகங்கள் அனைத்தும் மாயாவின் எல்லைக்குள் உள்ளன, மேலும் இந்த லோகங்களில் வசிப்பவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சிக்கு உட்பட்டவர்கள். முந்தைய வசனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அவைகளை து3ஹ்கா1லயம் மற்றும் அஶாஸ்வதம் (துன்பம் நிறைந்தது மற்றும் நிலையற்றது) என்று குறிப்பிட்டுள்ளார்.
தேவலோகத்தின் அரசனான இந்திரன் கூட ஒரு நாள் இறக்க வேண்டும். ஒரு முறை இந்திரன் தேவலோக கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மாவை ஒரு பெரிய அரண்மனையை நிர்மாணிப்பதில் ஈடுபடுத்தியதாக புராணங்கள் கூறுகின்றன. முடிவடையாத அதன் கட்டுமானத்தால் சோர்வடைந்த விஸ்வகர்மா உதவிக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். கடவுள் அங்கு வந்து, இந்திரனிடம், ‘இவ்வளவு பெரிய அரண்மனை! அதன் தயாரிப்பில் எத்தனை விஸ்வகர்மாக்கள் ஈடுபட்டுள்ளனர்?’ என்று கேட்டார்.
இந்தக் கேள்வியைக் கேட்டு ஆச்சரியப்பட்ட இந்திரன், ‘ஒரு விஸ்வகர்மா தான் இருக்கிறார் என்று நினைத்தேன்’ என்று பதிலளித்தான்.
. கடவுள் புன்னகைத்து, ‘ பதினான்கு உலகங்களைக் கொண்ட இந்தப் ப்ரபஞ்சத்தைப் போல, எல்லையற்ற ப்ரபஞ்சங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு இந்திரன் மற்றும் ஒரு விஸ்வகர்மா உள்ளனர் என்றார்.
அப்பொழுது இந்திரன் எரும்புகள் வரிசையாக தன்னை நோக்கி செல்வதைக் கண்டான். ஆச்சரியமடைந்து அந்த எரும்புகளின் தோற்றம் பற்றி விசாரித்தான். கடவுள் கூறுகிறார், ‘கடந்த ஜென்மத்தில் ஒரு காலத்தில் இந்திரனாக இருந்து, இப்பொழுது எரும்புகளின் உடம்பில் இருக்கும் எல்லா ஆத்மாக்களையும் நான் இங்கே கொண்டு வந்தேன்.’ இந்திரன் அவர்களின் எண்ணிக்கையைக் கண்டு வியந்தான்.
சிறிது நேரத்தில், லோமஷ் ரிஷி சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் தலையில் வைக்கோல் பாயை சுமந்திருந்தார்; அவரது மார்பில் ஒரு முடி வட்டம் இருந்தது. சில முடிகள் வட்டத்திலிருந்து விழுந்து, இடைவெளிகளை உருவாக்கின. இந்திரன் முனிவரை வரவேற்று , ‘ஐயா, ஏன் உங்கள் தலையில் வைக்கோல் மெத்தையைச் சுமக்கிறீர்கள். மேலும் உங்கள் மார்பில் உள்ள முடி வட்டத்தின் அர்த்தம் என்ன?’ என்று பணிவுடன் கேட்டார்.
அதற்கு லோமஷ் ரிஷி, ‘நான் சிராயு (நீண்ட ஆயுள்) என்ற வரத்தைப் பெற்றுள்ளேன். இந்த ப்ரபஞ்சத்தில் ஒரு இந்திரனின் ஆட்சியின் முடிவில், ஒரு முடி உதிர்கிறது. இது வட்டத்தில் உள்ள இடைவெளிகளை விளக்குகிறது. என் சீடர்கள் நான் தங்குவதற்கு ஒரு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் வாழ்க்கை தற்காலிகமானது என்று நான் நினைக்கிறேன், எனவே ஏன் குடியிருப்பைக் கட்ட வேண்டும்? மழை மற்றும் வெயிலில் இருந்து என்னைப் பாதுகாக்கும் இந்த வைக்கோல் பாயை நான் வைத்திருக்கிறேன். இரவில் அதை தரையில் விரித்துவிட்டு தூங்கச் செல்கிறேன்.’
இந்திரன் ஆச்சரியப்பட்டு, 'இந்த ரிஷிக்கு பல இந்திரர்களின் ஆயுட்காலம் உள்ளது, ஆனால் அவர் வாழ்க்கை தற்காலிகமானது என்று கூறுகிறார். பிறகு நான் ஏன் இவ்வளவு பெரிய அரண்மனையைக் கட்டுகிறேன்?’ என்று நினைத்தான். அவனுடைய அகந்தை நசுக்கப்பட்டது, அவன் விஸ்வகர்மாவை விடுவித்தான்.
இந்தக் கதைகளைப் படிக்கும்பொழுது, ப்ரபஞ்சத்தின் ப்ரபஞ்சவியல் பற்றிய பகவத் கீதையின் அற்புதமான நுண்ணறிவைக் கண்டு வியக்கத் தவறக்கூடாது. பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ், சூரியன் உண்மையில் ப்ரபஞ்சத்தின் மையம் என்று ஒரு சரியான சூரிய மையக் கோட்பாட்டை முன்வைத்த முதல் மேற்கத்திய விஞ்ஞானி ஆவார். அதுவரை, முழு மேற்கத்திய உலகமும் பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்று நம்பியது. வானவியலின் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் சூரியனும் பிரபஞ்சத்தின் மையம் அல்ல, ஆனால் பால்வெளி என்று அழைக்கப்படும் ஒரு விண்மீனின் மையப்பகுதியைச் சுற்றி வருகிறது என்பதை வெளிப்படுத்தியது. மேலும் முன்னேற்றமானது, பால்வெளி போன்ற பல விண்மீன் திரள்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் நமது சூரியனைப் போன்ற எண்ணற்ற நட்சத்திரங்களைக் கொண்டிருக்கின்றன என்ற முடிவு விஞ்ஞானிகளுக்கு உதவியது.
இதற்கு நேர்மாறாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேத தத்துவம் ஸ்வர் லோகத்தைச் சுற்றி வரும் பூமி பூர்4 லோக1ம் என்று கூறுகிறது, மேலும் அவைகளுக்கு இடையே பு4வர் லோக1ம் என்று அழைக்கப்படும் மண்டலம் உள்ளது. ஆனால் ஸ்வர் லோகம் நிலையானது அல்ல; இது ஜன லோகத்தின் ஈர்ப்பு சக்தியால் நிலை நிருத்தப்படுகிறது, அவற்றுக்கிடையே மஹர் லோக1ம் என்று அழைக்கப்படும் பகுதி உள்ளது. இது ப்3ரஹ்ம லோகத்1தை (ஸத்ய லோக1ம்) சுற்றி வருகிறது, அவற்றுக்கிடையே த1ப லோக1ம் என்று அழைக்கப்படும் ஒரு மண்டலம் உள்ளது. இது ஏழு மேல் உலகங்களை விளக்குகிறது; இதேபோல், ஏழு கீழ் உலகங்கள் உள்ளன. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு நுண்ணறிவுக்கு, இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!
ப்ரபஞ்சத்தில் உள்ள பதினான்கு உலகங்களும் மாயாவின் எல்லைக்குள் இருப்பதாகவும், அதன் விளைவாக, அவற்றில் வசிப்பவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சிக்கு உட்பட்டவர்கள் என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த வசனத்தில் கூறுகிறார். இருப்பினும், கடவுள்-உணர்வை அடைந்தவர்கள் பொருள் ஆற்றலின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். மரணத்தின் பொழுது ஜட உடலை விட்டு வெளியேறியவுடன், அவர்கள் கடவுளின் தெய்வீக இருப்பிடத்தை அடைகிறார்கள். அங்கு அவர்கள் தெய்வீக உடல்களைப் பெருகிறார்கள், அதில் அவர்கள் கடவுளின் தெய்வீக பொழுதுபோக்கில் நித்தியமாக பங்கேற்கிறார்கள். எனவே, அவர்கள் மீண்டும் இந்த ஜடவுலகில் பிறக்க வேண்டியதில்லை. சில துறவிகள் மாயையிலிருந்து விடுபட்ட பிறகும் திரும்பி வருகிறார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற உதவுவதற்காக மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். இவர்கள்தான் மனித குலத்தின் தெய்வீக நலனில் ஈடுபடும் அவதரித்த பெரும் ஞான குருக்கள் மற்றும் தீர்க்கதரிசிகள்.